தமிழ்நாடு

“ஆட்டோக்களில் ஜிபிஎஸ் உடன் கட்டண மீட்டர்” - பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

“ஆட்டோக்களில் ஜிபிஎஸ் உடன் கட்டண மீட்டர்” - பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

webteam

ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவியுடன் இணைந்த கட்டண மீட்டர்கள் பொருத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவியுடன் இணைந்த கட்டண மீட்டர்கள் பொருத்துவது குறித்து 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 2014 ஆம் ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணை இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்று ராஹத் பாதுகாப்பு சமுதாய அறக்கட்டளை சார்பில் அதன் செயலாளர் சுரேந்தர் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தத் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படாததால், பயணிகள் பாதுகாப்பில் சிக்கல் இருப்பதாகவும், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை தொடர்வதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

பெண்களும், குழந்தைகளும் தனியே பயணிக்கும் சூழல் நிலவுவதால், ஜிபிஎஸ் கருவியுடன் இணைந்த கட்டண மீட்டர் பொருத்துவது குறித்த அரசாணையை அமல்படுத்த உத்தரவிடுமாறும் கோரப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் விசாரணையை வரும் ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.