தமிழ்நாடு

கன்னியாகுமரி கடல்பகுதியில் கனமழை: கடலுக்குச் செல்லாமல் கரையில் காத்திருக்கும் கலன்கள்

webteam

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாத நிலையில் படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழகத்தில் குமரிக்கடல் மற்றும் கேரளா கடல் பகுதிகளில் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதேபோல் குளச்சல் முட்டம் சுற்றுவட்டார கடல் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து கடல் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து குளச்சல் முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் 5000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததால் தங்கள் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் குமரிக்கடல் பகுதிகளில் சூரைக்காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் மீனவர்கள் வரும் 7ஆம் தேதி வரை அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.