கபினி நீர்பிடிப்பு பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கபட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாசனத்திற்காக அணையின் மதகைத் திறந்து வைத்தார். முதல்கட்டமாக விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது அடுத்த 3 நாட்களுக்குள் கல்லணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கபினி நீர்பிடிப்பு பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கபினி அணையிலிருந்து மேட்டூர் அணைக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த 24 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கு 5 டிஎம்சி நீர்வரத்து இருக்கலாம் எனவுக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.