தமிழ்நாடு

சென்னையில் விடிய விடிய கனமழை! தெரிந்துகொள்ள வேண்டிய 8 தகவல்கள்!

ச. முத்துகிருஷ்ணன்

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. இந்த நிலையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த திடீர் கோடை மழை குறித்து தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான 7 தகவல்கள் இதோ!

1. நேற்று வானிலை மையம் வழக்கமாக வெளியிடும் அறிவிப்பில் “சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் வானிலை மையம் சொன்னால் மழை பெய்யாது என பலரும் நினைத்த நிலையில் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்து இருக்கிறது கோடை மழை.

2. சென்னையில் எழும்பூர், அண்ணா சாலை, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, போரூர், ஈக்காட்டுத்தாங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டியது.

3. இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி அம்பத்தூர், திருமுல்லைவாயிலிலும் பரவலாக கோடை மழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.

4. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அசோக் நகர் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் காலைப் பணிக்கு செல்பவர்கள் அவதியடைந்துள்ளனர்.

5. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளான திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டையில் பெய்த கனமழை வெப்பத்தை தணித்தது.

6. புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களிலும் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

7. இதனிடையே தமிழகத்தின் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. வரும் 22, 23ஆம் தேதிகளில் வடதமிழகம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.