தமிழ்நாடு

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Veeramani

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குமரிக்கடல் மற்றும் இலங்கைக் கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால் இன்றும் நாளையும் தென்தமிழகம், வடகடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 8 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இயல்பை விட 41 சதவிகிதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.