தமிழ்நாடு

மதுரை: கனமழையில் மூழ்கிய தற்காலிக காய்கறி சந்தை-ரூ.30 லட்சம் மதிப்புள்ள காய்கறிகள் சேதம்

webteam

மதுரையில் பெய்த தொடர் கனமழையால் அம்மா திடலில் செயல்பட்ட தற்காலிக மொத்த காய்கறி சந்தை முழுவதும் நீரில் மூழ்கி 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் விற்பனை செய்ய முடியாமல் சேதமாகி உள்ளன.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் மதுரை சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் அங்கிருந்து மாற்றப்பட்டு அம்மா திடல் மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வழக்கம்போல இரவு காய்கறி மொத்த விற்பனை நடைபெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அம்மா திடலில் 150 மொத்த காய்கறி கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தேவையான காய்கறிகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்வதற்கான வசதி செய்து தரப்பட்டிருந்தது.

இந்நிலையில் மதுரையில் நேற்று மாலை 4 மணியிலிருந்து தொடர்ந்து பெய்த இடியுடன் கூடிய கனமழையால் அம்மா திடல் முழுவதுமாக மழைநீர் சூழ்ந்தது. ஏற்கெனவே அந்தந்த கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் அனைத்தும் நீரில் மூழ்கிய நிலையில், இரவு வியாபாரத்தை துவங்க வந்த வியாபாரிகள் காய்கறிகள் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அப்பகுதி முழுவதுமாக நீர் சூழ்ந்ததால் வியாபாரம் செய்ய இடவசதி இல்லாமல் 150 கடைகளின் வியாபாரம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. மாற்று இடம் கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக 150 பேருக்கு இடம் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இன்று அதற்கான ஏற்பாடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

30 லட்ச ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. ஒருநாள் காய்கறி விற்பனை தடைபட்டதால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான காய்கறி மொத்த விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.