தமிழ்நாடு

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா

webteam

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார் உள்ளிட்ட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க, அரசும் பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனாலும் தினமும் பாதிப்பும், உயிரிழப்பும் கூடிக்கொண்டே செல்கிறது.

மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், துப்புரவாளர்கள் ஆகியோர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது முன்களப் பணியாளர்களாக வேலைப்பார்த்து வருகின்றனர். இதில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமடைந்தவர்களும் உள்ளனர். உயிரிழந்தவர்களும் உள்ளனர்.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த வெள்ளிக்கிழமை எனது மாமனார் நாகராஜனுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு நெருங்கிய உறவினர்களான நான், எனது மனைவி, எனது மகன் ஆகியோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம். சோதனையில் மனைவிக்கும் மகனுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் அரசு கிங் இன்ஸ்டியூட் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.