பேனா நினைவுச் சின்னம் pt desk
தமிழ்நாடு

பேனா நினைவுச் சின்னம் - ஆய்வறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் புதிய உத்தரவு

webteam

செய்தியாளர்: V.M.சுப்பையா

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையை ஒட்டி, வங்கக்கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை கொடுத்த அனுமதியை எதிர்த்து, ராம்குமார் ஆதித்யன், பாரதி மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன் ஆகியோர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

பேனா நினைவுச் சின்னம்

இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்ய நாராயணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்த போது, கடல் அரிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுபோல் ஒரு திட்டத்தை செயல்படுத்துபவரிடமே அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சொன்னால் வெளிப்படை தன்மையுடன் நியாயமான ஆய்வு நடைபெறுமா? ஒருவேளை பாதிப்பு கண்டறியப்பட்டால் அதற்குள் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டிருக்குமே... அப்போது என்ன செய்வீர்கள்?” என்றும் மத்திய அரசிற்கு தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.

TN Government

மேலும், “இனி ஒரு திட்டத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருந்தால் அதனை மத்திய சுற்றுச்சூழல் துறையே மேற்கொண்டு அதற்கான செலவினை திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து வசூலித்து கொள்ள வேண்டும். மேலும், இத்திட்டத்திற்கு அனுமதி கொடுக்கும் போது நிபந்தனையாக விதிக்கப்பட்ட ஆய்வினை விரைந்து மேற்கொண்டு அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் மாதம் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.