தமிழ்நாடு

சிறுமி வன்கொடுமை வழக்கில் அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும்: சி.வி.சண்முகம்

webteam

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் கிருபானந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தகுந்த ஆதாரம் இல்லை எனக்கூறி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் சலூன்கடை சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே வழக்கின் தீர்ப்பை ஆராய்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும் எனவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.