தமிழ்நாடு

‘டிரில்லர் இயந்திரத்தில் தங்கம் கடத்தல்’  - விமான சோதனையில் சிக்கிய பயணி

webteam

மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்த பயணியை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு சிங்கப்பூரில் இருந்து வரும் பயணி ஒருவர் கடத்தலில் ஈடுப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் வந்தது. அதனை அடுத்து மத்திய சுங்க இலகா நுண்ணறிவு பிரிவினர் உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையில் வெளிநாட்டிலிருந்து வரும் விமான பயணிகளை தீவிர கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து மதுரை வந்த ஏர்இந்தியா எஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்ட போது திருச்சியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் தேவநாத்(35) என்பவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் அவர் டிரில்லர் இயந்திரத்தில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரிந்தது.

அவரிடம் சோதனை செய்தபோது ரூ. 13 லட்சத்து 39 ஆயிரம் மதிப்புள்ள 350 கிராம் வட்டவடிவ தங்கம் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்த கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.