தமிழ்நாடு

திருமணம் செய்ய கோரியதற்காக காதலனால் தீ வைக்கப்பட்ட இளம்பெண்? திருப்பூரில் பயங்கரம்

webteam

பல்லடம் அருகே திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி மீது தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெத்தாம்பாளையம் சாலையில் பனைப்பாளையம் பகுதியில் இளம்பெண் ஒருவர் ஆடையின்றி உடல் முழுவதும் தீயால் எரிந்த நிலையில், காப்பாற்றுங்கள் என அலறிக் கொண்டே காட்டு பகுதியிலிருந்து ஓடி வந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இளம் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண் தானாக தற்கொலை செய்ய முயற்சித்து தீ வைத்துக் கொண்டாரா, அல்லது கொலை செய்யும் நோக்கில் வேறு யாரேனும் தீ வைத்தார்களா என்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த இளம்பெண் ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்த பூஜா (19) என தெரியவந்தது.

இவர், அதே பகுதியில் குடியிருந்து வரும் லோகேஷ் என்ற இளைஞரை பூஜா காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் லோகேஷ் மற்றும் பூஜா இருவரும் இன்று தனியாக காட்டு பகுதிக்குச் சென்றதாகவும், அப்போது பூஜா லோகேஷிடம் உடனடியாக திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் கொண்ட லோகேஷ் பூஜாவை கல்லால் அடித்துள்ளார் என்றும், இதில் தலையில் பலத்த காயத்துடன் மயக்கமடைந்த பூஜாவை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி செய்தார் என்றும் காவல்துறையினருக்கு தெரியவந்திருக்கிறது என சொல்லப்படுகிறது.

இதனையடுத்து போலீசார் லோகேஷை தேடி வந்த நிலையில், தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் மயக்கம் வருவதாகவும் கூறி லோகேஷ் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்ந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த பல்லடம் டி.எஸ்.பி சௌமியா மற்றும் போலீசார், லோகேஷிடம் இது குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக லோகேஷை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த பெண்ணை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.