தமிழ்நாடு

விழுப்புரம்: தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச்சென்ற சிறுமி வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு

Sinekadhara

விழுப்புரத்தில் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச்சென்ற சிறுமி வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். 

விழுப்புரம் மாவட்டம் சித்திலிங்கமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராசு. இவருடைய 12 வயது மகள் சைலஜா, தன்னுடைய தாத்தா இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள ஊருக்கு வந்திருந்தார். அவர் ஆற்றில் குளிக்கச் சென்றிருக்கிறார். அப்போது ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், சிறுமி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்ததன்பேரில், வீரர்கள் சிறுமியைத் தேடியதில் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் உடலை மீட்ட வீரர்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.