தமிழ்நாடு

எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து: திரைத்துறை ஊழியர் உயிரிழப்பு

jagadeesh

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து திரைத்துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

சாலிகிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற 62 வயது நபர், திரைத்துறையில் தயாரிப்பு பிரிவு ஏஜெண்ட்டாக இருந்தார். நேற்றிரவு வீட்டு சமையலறையில் பால் காய்ச்ச அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இதில் தீப்பற்றி சந்திரசேகர் அலறினார். எரிவாயு சிலிண்டர் வெடித்த சப்தத்தால் பயந்து அக்கம்பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். தகவல் அறிந்து அசோக்நகர், விருகம்பாக்கத்தில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

60 சதவிகிதத்திற்கு மேல் தீக்காயம் பட்ட சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு முழுவதும் சேதமடைந்தது. ஜன்னல்கள் உடைந்து சிதறியதோடு வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த மின்வாரிய பெட்டியே பெயர்ந்து வெளியே வந்ததால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து இரவோடு இரவாக சரி செய்தனர்.