ரோகித் ராஜ், கலைச்செல்வி புதிய தலைமுறை
தமிழ்நாடு

தப்பி ஓட முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ.. நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர்!

ஜெ.அன்பரசன்

சென்னை டி.பி.சத்திரம் பழைய பேருந்து நிலைய பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ரோகித் ராஜ் (35). ஏ கேட்டகிரி ரவுடியான ரோகித் ராஜ் மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட 13-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக ரவுடி ரோகித் ராஜ்,

  • 2022-ஆம் ஆண்டு நடந்த பைனான்ஸியர் ஆறுமுகம் கொலை வழக்கு,

  • 2021-ஆம் ஆண்டு பிரபல ரவுடி சிவக்குமார் கொலை வழக்கு,

  • 2017 ரவுடி தீச்சட்டி முருகன் கொலை வழக்கு

ஆகிய மூன்று கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளார். இந்த மூன்று கொலை வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட ரோகித் ராஜ் ஜாமீனில் வெளிவந்த பின், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், ரவுடி ரோகித் ராஜ் மீது பிடிவாரண்ட் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.

இதனால் தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்துவரும் ரவுடி ரோகித் ராஜை பிடிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் அவர் தலைமறைவாக இருந்து வருவதாக தகவல் கிடைத்து, அங்கு சென்ற தனிப்படை போலீஸார் ரவுடி ரோகித் ராஜை சுற்றி வளைத்து கைதுசெய்து சென்னை அழைத்து வந்தனர்.

கைது செய்யப்பட்ட அவரை, டி.பி.சத்திரம் பகுதியில் வைத்து விசாரணை மேற்கொண்டபோது ரவுடி ரோகித் ராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலைமை காவலர்களான சரவணகுமார் மற்றும் பிரதீப் ஆகிய இருவரையும் கையில் வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றார். அப்போது, தற்காப்புக்காக பெண் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி துப்பாக்கியை எடுத்து ரோகித் ராஜ் காலில் சுட்டுப் பிடித்துள்ளார். இதில் காயமடைந்த ரோகித் ராஜ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், காயமடைந்த இரு தலைமை காவலர்களும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிக்க: UWW விதிமுறைகளில் சிலஓட்டைகள்! இப்படி வாதிட்டால் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு

துணிச்சலாகச் செயல்பட்டு ரவுடி ரோகித் ராஜை, சுட்டுப் பிடித்த பெண் உதவி ஆய்வாளர் கலைச்செல்விக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி ரோகித் ராஜ் யார் என்பது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

யார் இந்த ரவுடி ரோகித் ராஜ்?

ரவுடி ரோகித் ராஜ் 16 வயது முதலே சிறுசிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும், 2015-ஆம் ஆண்டு டி.பி.சத்திரம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிரபல ரவுடியாக திகழ்ந்து வந்த ஜெயராஜின் வலதுகரமாக ரோகித் ராஜ் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. யார் பெரியவன் என்ற பஞ்சாயத்தில், கடந்த 2013ஆம் ஆண்டு ஜெயராஜை, தீச்சட்டி முருகன் கொலை செய்துள்ளார். இதற்கு பழிவாங்க காத்திருந்த ரோகித் ராஜ் பிரபல ரவுடியான மதுரை பாலா ஆகியோருடன் கூட்டணி சேர்ந்து தீச்சட்டி முருகனை கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார். பின்னர் டி.பி.சத்திரம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாமூல், கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த ரோகித் ராஜ், 2021-ஆம் ஆண்டு சென்னையை கலக்கிவந்த ரவுடி சிவகுமாரை, மதுரை பாலா ஆகியோருடன் இணைந்து அசோக் நகர் பகுதியில் வைத்து வெட்டிக் கொலை செய்தனர்.

இதேபோல கடந்த 2022-ஆம் ஆண்டு அமைந்தகரை பகுதியில் பட்டப்பகலில் ஓடஓட விரட்டி பைனான்ஸியர் ஆறுமுகத்தை கொலை செய்ததும் இவர்கள்தான். சென்னையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர கொலை செய்துவந்த ரவுடி ரோகித் ராஜ், தொடர்ச்சியாக டிபி சத்திரம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாமூல், கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதும், மாமுல் தராதவர்களை நேரடியாகச் சென்றும் செல்போனிலும் தொடர்ச்சியாக, ‘தான் பெரிய ரவுடி’ எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்து வருவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், சில முக்கிய புள்ளிகளையும் ரோகித் ராஜ் கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ரவுடி மதுரை பாலா சிறைக்குச் சென்றபின்பு, வெளியில் இருந்து சென்னையை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு சமூக விரோதச் செயல்களிலும் ரோகித் ராஜ் ஈடுபட்டு வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த ரோகித் ராஜ், தொடர்ச்சியாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பல புகார்கள் போலீசாருக்கு வந்துள்ளதும் தெரியவந்தது.

இதையும் படிக்க: மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா திருமணம் குறித்த செய்தி| முற்றுப்புள்ளி வைத்த மனுபாக்கரின் தந்தை!

பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுகள்! யார் இவர்?

இந்த நிலையில், ரவுடியை சுட்டுப் பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை, சென்னை காவல் ஆணையர் அருண், நேரில் அழைத்து பாரட்டி வெகுமதி அளித்தார்.

2020-ஆம் ஆண்டு பொதுமக்களின் தண்ணீர் பிரச்னையை தீர்த்துவைத்ததால் அயனாவரம் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர் பெண் காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி. 2011-ஆம் ஆண்டு பேட்ச் நேரடி காவல் உதவி ஆய்வாளரான கலைசெல்வி தேனியைச் சேர்ந்தவர். தமிழ்நாடு காவல் பணியில் தேர்வாகி முதன்முதலில் சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.

அதன்பின்பு சேத்துபட்டு, அபிராமபுரம், கோட்டூர்புரம், அயனாவரம், கிழக்கு சைபர் கிரைம் ஆகிய நிலையங்களில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து தற்போது டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் அயனாவரத்தில் பணிபுரிந்தபோது அயனாவரம், ஆனந்த விநாயகர் கோவில், இரண்டாவது தெருவில் நீண்டகாலமாக குடிநீர் பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், மக்களின் குடிநீர் பிரச்னையை புரிந்துகொண்ட உதவி ஆய்வாளர் கலைச்செல்வி தனது சொந்த பணத்தில் 2020-ஆம் ஆண்டு அடிகுழாய் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்னை தீர ஏற்பாடு செய்தார். இதனால் அயனாவரம் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். இந்தச் சேவையால் தமிழ்நாடு காவல்துறை, உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை வெகுவாக பாராட்டி இருந்தது.

இதையும் படிக்க: இந்திய பேட்மிண்டன்வீரர் 18 மாதங்கள் தகுதிநீக்கம்! பாரிஸ் பாராலிம்பிக்கில் பங்கேற்க முடியாது!பின்னணி?

ரவுடி ரோகித் ராஜின் பாட்டி புது புகார்...

இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த ரவுடி ரோகித் ராஜின் பாட்டியான காணிக்கை மேரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எனது பேரன் மீது பொய் வழக்கு போட்டு போலீசார் சுட்டுவிட்டனர். தேனியில் தனது பேரன் ரோகித் ராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், எப்படி டி.பி.சத்திரத்தில் தப்பித்து ஓட முடியும்? திட்டமிட்டே தனது பேரனை சுட்டுவிட்டார்கள்.

ஏற்கெனவே போலீஸாரால் ரோஹித் ராஜின் கால் உடைக்கப்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், எப்படி அவரால் தப்பித்து ஓட முடியும்? தொடர்ச்சியாக எனது பேரனின் மீது பொய் வழக்கு போட்டு வருவதால், இதற்கு நீதி கிடைக்க வேண்டும். எனது பேரன் மீது மூன்று கொலை வழக்குகள் மட்டுமே உள்ளது. அவன் திருந்த போலீசார வாய்ப்பு தரவில்லை. அவன்மீது பொய் வழக்கு போட்டே ரவுடியாக்கியது காவல்துறையினர்தான்” என தெரிவித்தார்.