Kerala women pt desk
தமிழ்நாடு

இப்படியெல்லாம் நடக்குமா! மறுநாளே புதுமணப்பெண் மாயம்! 2வது திருமணம் செய்த இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்!

webteam

செய்தியாளர்: சரவணகுமார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (29). காற்றாலையில் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் இவருக்கு மது பழக்கம் இருந்ததால் இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து அவருக்கு மறுமணம் செய்ய பெண் பார்த்து வந்துள்ளனர்.

Kerala women

அப்போது, கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியைச் சேர்ந்த திருமண புரோக்கர் ஒருவர், ராதாகிருஷ்ணனை அணுகியுள்ளார். கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை காண்பித்ததை அடுத்து அந்த பெண்ணை ராதாகிருஷ்ணனுக்கு பிடித்துள்ளது. இதையடுத்து திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனிடையே பெண்ணின் வீட்டில் வசதி இல்லாததால் ஏதாவது உதவி செய்யுமாறு புரோக்கர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் வீட்டினர் அந்தப் பெண்ணுக்கு ஒன்றரை பவுன் தங்க நகை போட்டதோடு புரோக்கருக்கு ரூ.80 ஆயிரம் பணமும் கொடுத்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராதா கிருஷ்ணனுக்கும் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கும் உடுமலை திருமூர்த்தி மலை அமன லிங்கேஸ்வரர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் தாராபுரத்திற்கு வந்தனர்.

Kerala women

அங்கு முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், தனக்கு மாதவிடாய் எற்பட்டுள்ளதாகவும் மற்றொரு நாள் முதலிரவு வைத்துக் கொள்ளலாம் என்றும் அந்த பெண் கூறியுள்ளார். அதனை நம்பிய ராதாகிருஷ்ணனும் சம்மதம் தெரிவித்தார். மறுநாள் உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் அவரை பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராதாகிருஷ்ணன் அவரை பொள்ளாச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பொள்ளாச்சிக்கு சென்றதும் கேரளா பெண் திடீரென மாயமாகிவிட்டார் நீண்ட நேரமாகியும் அவர் வராததால் சோகத்துடன் தாராபுரத்திற்கு திரும்பிய ராதாகிருஷ்ணன், நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அப்போது நகை பணத்திற்காக ராதாகிருஷ்ணனை ஏமாற்றிய அந்தப் பெண் திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. அந்தப் பெண்ணின் கணவர் தான் திருமண புரோக்கர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து திருமண புரோக்கரையும் அவரது மனைவியையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் இது போன்று அவர்கள் யார் யாரையெல்லாம் ஏமாற்றி பணம் - நகைகளை பறித்துள்ளனர் என்ற விவரம் தெரியவரும். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.