விருதுநகர் மாவட்டம் முகநூல்
தமிழ்நாடு

விருதுநகர் | சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்து - 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஜெனிட்டா ரோஸ்லின்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பந்துவார்பட்டி பகுதியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

இருபதுக்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த ஆலையில், நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், வழக்கம்போல இன்று காலை பணியை தொடங்குவதற்காக தொழிலாளர்கள் வந்த சில நிமிடத்தில், வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் மூன்று அறைகள் இடிந்து தரைமட்டமாகின. விபத்தில் தொழிலாளர்கள் ராஜ்குமார், மாரிச்சாமி, செல்வகுமார், மோகன் ஆகியோர் உயிரிழந்தனர். பட்டரசாயன கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.