Road accident pt desk
தமிழ்நாடு

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்து - மூன்று பெண்கள் உட்பட 4 பேர் பலி

webteam

செய்தியாளர்: சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கன்னுக்குடிபட்டியை சேர்ந்தவர்கள் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி பகுதியில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியது.

Ambulance

இதில் முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சங்கீதா, லட்சுமி ஆகிய இருவரும் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.