கள்ளக்குறிச்சியில் சந்தேகத்திற்குரிய வகையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்ததுதான் உயிரிழப்பிற்குக் காரணம் என மக்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதனை மாவட்ட ஆட்சியர் மறுத்துள்ளார்.
கருணாபுரம் பகுதியில் பல்வேறு நபர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பிரவீன், சுரேஷ், சேகர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மேலும் பலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்ததாலேயே அவர்கள் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்ததாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். அவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு மதுகுடிக்கும் பழக்கமே இல்லை எனக்கூறிய ஆட்சியர், கள்ளச்சாராயத்தை ஒழிக்க மாவட்டம் முழுவதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
உயிரிழப்புக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.