தமிழ்நாடு

"தமிழ்நாட்டில் மட்டுமே வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்"-மா.சுப்பிரமணியன்

webteam

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மட்டுமே வெளிமாநில தொழிலாளர்கள் மிக மிக பாதுகாப்பாக இருக்கின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை நந்தனம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பில் 900 இருக்கைகள் மற்றும் குளிர்சாதன வசதியுடன் அமைய உள்ள கலையரங்கத்திற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது.

"நந்தனம் கல்லூரி மாணவர்களுக்காக ரூ.3.70 கோடி மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட உள்ளது, இதற்காக ரூ.2 கோடி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டதோடு, குளிர்சாதன வசதி போன்ற கூடுதல் வசதிகளுக்காக ரூ.3 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கலையரங்கில் ஆயிரம் மாணவர்கள் அமர முடியும்."

"புதிய ஆட்சி அமைந்தபிறகு புள்ளியியல், பொது நிர்வாகம், வணிகவியல், நிதி மேலாண்மை ஆகிய 4 பாடப் பிரிவுகள் இந்த கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. 365-க்கும் மேல் முதுகலை மாணவர்கள் இங்கு பயில்கின்றனர். புறநகர் பகுதி மாணவர்கள் ஏராளமானோர் இங்கு பயின்று வருகின்றனர். பொருளாதார, சமூக அடிப்படையில் பின்தங்கிய மாணவர்கள் இங்கு கல்வி பயில்கின்றனர். நந்தனம் கல்லூரி சென்னையின் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது."

"சைதை தொகுதி சஎம்எல்ஏ-வாக இருந்நு சைதாப்பேட்டைக்கு பெருமை சேர்த்தவர் கருணாநிதி. எனவே கலையரங்கத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட வேண்டும் என்று இக்கல்லூரி முதல்வர் கருத்து தெரிவித்தார், அதை முதலமைச்சரிடம் எடுத்துக் கூறி கருணாநிதி பெயரில் கலையரங்கம் வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்."

வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகளும , மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகளும் தமிழகத்திலும் தடை செய்யப்படும். வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதிக்கப்படுவதாக கற்பனையான செய்திகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

கொரோனா காலகட்டத்தில் கூட எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது வெளிமாநில தொழிலாளர்களுக்கு ' ஒன்றிணைவோம் வா திட்டம் மூலம் பல உதவிகளை செய்தவர் ஸ்டாலின், முதலமைச்சராக வந்த பிறகு அவர்களது பயணச் செலவை ஏற்று, பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார். தமிழகத்தில் மட்டுமே வெளிமாநில தொழிலாளர்கள் மிக மிக பாதுகாப்பாக இருக்கின்றனர், முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமையில் சிலர் வீண் வதந்தியை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

கொரோனா விதிகளை தொடர்ந்து கடைபிடித்தால் வைரஸ் காய்ச்சல பாதிப்பையும் தடுக்க முடியும். வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும், தற்போது அந்தளவிற்கு பாதிப்பு இல்லை என்று கூறினார்.