தமிழ்நாடு

ஃபோர்டு தொழிற்சாலை செட்டில்மெண்ட் விவகாரம்: 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

kaleelrahman

மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் செட்டில்மெண்ட் பேச்சுவார்த்தை நடத்தக்கோரி தொடர்ந்து மூன்றாவது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இயங்கி வரும் பிரபல ஃபோர்டு கம்பெனியை ஜூன் 30-ஆம் தேதி நிரந்தரமாக மூடப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பெனி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் என பலதரப்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

போராட்டம் தொடங்கிய ஆரம்பகால கட்டத்தில் ஊழியர்களுக்கான செட்டில்மெண்ட் பணம் முறையாக பணிக்கால அடிப்படையில் வழங்கப்படும் என கம்பெனி நிர்வாகம் தரப்பில் உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், நிறுவன ஊழியர்கள் செட்டில்மெண்ட் பணத்தை அதிகப்படுத்தி தரக்கோரி தொடர்ந்து மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியை புறக்கணித்து பங்கேற்றுள்ளனர்.