தமிழ்நாடு

காணாமல் போன நாயை கண்டுபிடித்து தருவர்களுக்கு ரூ.5,000 சன்மானம்: போஸ்டரால் பரபரப்பு

காணாமல் போன நாயை கண்டுபிடித்து தருவர்களுக்கு ரூ.5,000 சன்மானம்: போஸ்டரால் பரபரப்பு

kaleelrahman

சிவகங்கையில் காணாமல் போன நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.5,000 சன்மானம் என்று நாயின் உரிமையாளர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியை சேர்ந்தவர் சேவுகன். இவர், ராஜபாளையத்தில் இருந்து கண்ணி ரக நாயை வாங்கிவந்து அதற்கு 'ஜீ 'என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் இவரது செல்ல நாய் திடீரென காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாய் வீட்டுக்கு வராததால் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சோகத்தில் இருந்த சேவுகன் தனது நாயை காணவில்லை என்றும், அதனை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 5000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் மதகுபட்டி, ஒக்கூர், பாகனேரி ,சொக்கநாதபுரம், உட்பட 15 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.

இதுவரை மனிதர்களை மட்டுமே காணவில்லை என்றும், கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் தரப்படும் என்றும் சுவரொட்டிகள் ஒட்டுவது வழக்கம். ஆனால், கொரோனா நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு என பலரும் வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில், நாயை கண்டுபிடித்து தர ரூ.5000 சன்மானம் என்ற அறிவிப்பு கிராம மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.