தமிழ்நாடு

காவிரி வெள்ளம்: சோகத்தில் சுற்றுலாப் பயணிகள், மகிழ்ச்சியில் விவசாயிகள் !

webteam

ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். மேலும் கடுமையான கட்டுபாடுகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

கடந்த சில வாரங்களாக தமிழகம் மற்றும் கர்நாடகவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்தும் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுதால் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து பலமடங்காக அதிகரித்து வருகிறது. 

தமிழக எல்லையான பில்லிகுண்டுலு பகுதியில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியை தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 15 ஆயிர‌ம் கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒகேனக்கலில் இன்று ஆடிப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே உள்ளூர் வாசிகள் ஆற்றுக்கு வருவது வழக்கம். ஆனால் ஆற்றுப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி உள்ளூர் வாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் ஒகேனக்கலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒகேனக்கலில் தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் அனைத்தும் அதன் எல்லையிலே திருப்பி அனுப்பப்படுகின்றன. இதனைதொடர்ந்து கடுமையான கட்டுபாடுகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இதனால் அங்கே சிரமம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றன.


 
சுற்றுலாப் பயணிகள் தடை ஏன்..?

கடந்த 2013 ஆம் ஆண்டு ஒகேனக்கலுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்த நிலையில், சுற்றுலாப் பயணி ஒருவர் ஆற்றில் குளித்த போது வெள்ளத்தால் அடித்து செல்லபட்டார். அப்போது அவரை காப்பற்ற பரிசலில் சென்ற இருவரும் மாற்றி கொண்டனர். பின்பு கடும் போரட்டத்திற்க்கு பிறகு அவர்களை பேரிடர் மேலாண்மை மீட்புப்குழு மீட்டது. அச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் மாவட்ட நிர்வாகம் பல இன்னல்களை சந்தித்தது. அதன் காரணமாகவே தான் தற்போது  கடுமையான கட்டுபாடுகளை விதித்து, மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது.

பாசனத்திற்காக நீர்த்திறப்பு :

மாவட்ட மக்கள் இடர்பாடுகளை சந்த்தித்தாலும், இதர காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காரணம் மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  

இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து நாளை மறுநாள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனால் ‌சம்பா மற்றும் தாளடி சாகுபடியை முழுமையாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் நடவுப் பணிகளைத் காவிரி டெல்டா விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 64 க‌ன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 95.75 அ‌டியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.