தமிழ்நாடு

கவிழ்ந்த படகு.. கடலில் தத்தளித்த சென்னை மீனவர்கள் - விரைந்து மீட்ட தீயணைப்பு படையினர்

webteam

சென்னை மெரினாவில் படகு பழுதானதால் கடலில் சிக்கித் தவித்த 2 மீனவர்களை தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

சென்னை, திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு நேற்று கரைக்கு திரும்பினர். அப்போது அவர்கள் பயணித்த பைபர் படகு எஞ்சினில் பழுது ஏற்பட்டதால் அலையில் சிக்கிக் கவிழ்ந்தது. இதில் இரண்டு மீனவர்கள் படகுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். எஞ்சிய மூன்று மீனவர்கள் நீந்தி கரைக்குத் திரும்பி மெரினா கடற்கரை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

துரிதமாக செயல்பட்டு, நீச்சல் தெரிந்த 6 தீயணைப்பு படையினர் கடலுக்குள் சென்று, ஆறுமுகம், ஜெயசீலன் ஆகிய 2 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு மீனவர்களைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு தீயணைப்புப் படை இயக்குநர் சைலேந்திரபாபு வெகுமதி வழங்கி பாராட்டினார்.