கார் மோதிய விபத்து pt desk
தமிழ்நாடு

மதுரை: கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்து – வாக்கிங் சென்ற தந்தை மகள் உயிரிழப்பு

webteam

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை திருமங்கலம் முகமது ஷா புரத்தைச் சேர்ந்தவர் துளசி நாதன். செல்போன் கோபுர பராமரிப்பு வேலை செய்து வரும் இவருக்கு, விஜயலட்சுமி என்ற மனைவியும் சஷ்டிகா என்ற 6 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை துளசி நாதன் தனது மகள் சஷ்டிகா உடன் திருமங்கலம் அருகே உள்ள குதிரைசாரி குளம் விளக்கு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

தந்தை மகள் உயிரிழப்பு

அப்போது சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழிச்சாலை இருந்த தடுப்பை தாண்டி சர்வீஸ் ரோட்டில் நடைபயணம் மேற்கொண்டிருந்த தந்தை மகள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த குழந்தை சஷ்டிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் துளசி நாதனை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் காவல் துறையினர், சஷ்டிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரை விபத்து

இதற்கிடையே மேல் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துளசி நாதன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.