Cement factory pt desk
தமிழ்நாடு

அரியலூர்|”பிச்சை எடுப்பதை தவிர வேறுவழியில்லை”- அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் வேதனை!

webteam

செய்தியாளர்: வெ.செந்தில்குமார்

அரியலூரில் அரசு சிமெண்ட் ஆலைக்காக கடந்த 1997 ஆம் ஆண்டு புதுப்பாளையம், நெறிஞ்சிகோரை, தாமரைகுளம், சீனிவாச புரம், கல்லங்குறிச்சி, வெளிப்பிரிங்கியம், காட்டுபிரிங்கியம், அஸ்தினாபுரம் ஆகிய 8 கிராமங்களில் ஏக்கருக்கு தலா 11 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நிலத்திற்கு ஏற்றவாறு வழங்கி அரசு நிலத்தை கையகப்படுத்தியது. இதை செண்ட் மதிப்பில் சொன்னால் 150 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில், தங்களுக்கு இழப்பீட்டுத் தொகை தர வேண்டும் என 390 விவசாயிகள் அரியலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Land

இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு 319 வழக்குகளில் விவசாயிகளுக்கு அரியலூர் நில ஆர்ஜித நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் விசாரணையில் 2017 ஆம் ஆண்டு செண்ட் ஒன்றுக்கு 1200 ரூபாய் எனவும், 2022 ஆம் ஆண்டு செண்ட் ஒன்றுக்கு 1300 ரூபாய் வழங்கத் வேண்டும் எனவும் உத்திரவிட்டது.

இதனை எதிர்த்து அரசு சிமெண்ட் ஆலை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு செண்ட் ஒன்றுக்கு 300 ரூபாய் குறைக்கப்பட்டு 900 ஆயிரம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அரசு சிமெண்ட் ஆலை வட்டியுடன் சேர்ந்து உடனடியாக நீதிமன்றம் வைப்பு தொகையை கட்டியது. இதனை எதிர்த்து விவசாயிகள் மீண்டும் முறையிட்டனர்.

இதனால் கடந்த ஜனவரி மாதம் 16 வழக்குகளில் விவசாயிகளுக்கு செண்ட் ஒன்றுக்கு 1500 ரூபாய் வட்டியுடன் கணக்கிட்டு தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில் அரியலூர் நீதிமன்றத்திலும் 10 வழக்குகளில் இதே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இதே விவசாய நிலங்களை அதே கால கட்டத்தில் தனியார் சிமெண்ட் ஆலை ஏக்கர் 1.5 லட்சம்; எனவும் செண்ட் 1500 என விவசாயிகளிடம் வாங்கியதை மேற்கோள்காட்டி இந்த இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், தீர்ப்பில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு இதுவரை தொகை வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து, 2 தலைமுறைகளாக செய்வதறியாது தவிக்கின்றனர்.

Cement factory

இது குறித்து விவசாயிகளின் வழக்கறிஞரும் தற்போது அரியலூர் சட்டமன்ற உறுப்பினருமான சின்னப்பா அவர்களிடம் கேட்டபோது, ”இந்த வழக்குகளில் இதுவரை 26 வழக்குகளில் தீர்ப்பு வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் 80 வழக்குகளில் தீர்ப்பு வர உள்ளது. இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் விவசாயிகளுக்கு பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். கடந்த 2017 ஆம் ஆண்டு அரியலூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு செண்ட் ஒன்றுக்கு 900 ரூபாய் மற்றும் வட்டியுடன் அரியலூர் நீதிமன்றத்தில் வைப்பு தொகை கட்டியுள்ளது. மேல் முறையீடு தொகை அவர்கள் தீர்ப்புபடி தொகை கட்டுவதாகவும் சொல்லியுள்ளனர். எனவே ஒருசில மாதங்களில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்” எனக் கூறினார்.