EPS pt desk
தமிழ்நாடு

“வலுவான கூட்டணி அமையும்: ஆனால், கூட்டணியை மட்டுமே நம்பி இருக்காமல் உழைக்க வேண்டும்” - இபிஎஸ்

webteam

செய்தியாளர்: ரமேஷ்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து 7ஆவது நாளாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

கோவை, நீலகிரி, பொள்ளாச்சி என 3 மக்களவைத் தொகுதி கட்சி நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். இத்தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எடப்பாடி பழனிசாமி

அப்போது, “நீலகிரியில் திமுக கூட்டணி வலுவாக இருந்ததாகவும், அதிமுக கூட்டணி வலுவாக இல்லை. அதனால்தான் நீலகிரி தொகுதியில் அதிமுக தோல்வியடைந்தது. ஆ.ராசா, எல்.முருகன் என நன்கு அறிந்த முகம் என்பதும் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட முக்கியக் காரணமாக இருந்தது” என கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கு நீலகிரியில் மொத்தம் உள்ள ஆறு எம்.எல்.ஏக்களில் 4 எம்எல்ஏக்கள் அதிமுகவை சேர்ந்தவர்களாக இருந்தும் ஏன் கட்சி தோல்வியைத் தழுவியது என கட்சித் தலைமை கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. தொடர்ந்து மாலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் “கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை காட்டிலும் வாக்கு குறைந்தது ஏன்?” என கட்சித் தலைமை நிர்வாகிகளிடம் கேள்வி கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாமலை

தொடர்ந்து, “2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்றாலும், கூட்டணியை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. நம் உழைப்பை நம்பி இருக்க வேண்டும்” என்று அறிவுரை கூறிய எடப்பாடி பழனிசாமி, “அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்” என அறிவுறுத்தியதாக தெரிகிறது