தமிழ்நாடு

விதிமுறையை மீறி 6 ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வை நடத்திய கோவை பள்ளிக்கு சீல்

விதிமுறையை மீறி 6 ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வை நடத்திய கோவை பள்ளிக்கு சீல்

PT

கோவை வெரைட்டி ஹால் பகுதியில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புக்கான நுழைவுத் தேர்வு நடத்தியதால் அப்பள்ளிக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சீல் வைத்தார்.

கோவையில் உள்ள தனியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் அரசின் உத்தரவை மீறி ஆறாம் வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நுழைவுத்தேர்வு இரு தினங்களாக நடத்தப்பட்டது. தினமும் 10 முதல் 15 மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.இந்நிலையில் இது குறித்து பிரேம் என்பவர் மாவட்ட ஆட்சியருக்குப் புகைப்பட ஆதாரங்களுடன் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தெரிந்துகொண்ட பள்ளி நிர்வாகம் உடனடியாக தேர்வு எழுத வந்த சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களைப் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் தெற்கு வட்டாட்சியர் அருள்முருகன் ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் பள்ளியில் ஊரடங்கு உத்தரவு மீறப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் பள்ளி முதல்வர் அறை, நுழைவுத்தேர்வு நடத்திய பகுதி என அனைத்தையும் அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூறும் போது “நுழைவுத் தேர்வு நடத்தியது தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.