கூடங்குளம் - நேபாளர்களை பணியமர்த்தியதற்கு தொழிற்சங்கத்தினர் ஆவேசம்! pt desk
தமிழ்நாடு

கூடங்குளம் | “உள்ளூரில் படித்த இளைஞர்கள் இருக்கும்போது நேபாளர்களை பணியமர்த்துவதா?”–வெடித்த போராட்டம்

webteam

செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணா

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான அணு மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் மற்றும் இரண்டாம் அணு உலைகள் மூலம் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 3 மற்றும் நான்காவது அணு உலைகளில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், 5 மற்றும் 6 ஆகிய அணு உலைகளில் 35 சதவீதம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

போராட்டம்

இந்நிலையில், இன்று காலை தனியார் ஒப்பந்த நிறுவனமான (எல்என்டி நிறுவனம்) அணு உலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்காக 2 பேருந்துகளில் நேபாள நாட்டைச் சேர்ந்த சுமார் 200 பேரை பணிக்கு அழைத்து வந்தள்ளது. இது குறித்த தகவல் அறிந்து உள்ளூரைச் சேர்ந்த "கூடங்குளம் காண்ட்ராக்ட் அசோசியேஷன்" என்ற தொழிற்சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேபாள பணியாளர்களை அழைத்து வந்த பேருந்துகளை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்ததோடு அவர்களை கீழே இறக்கி விட்டனர்.

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் மற்றும் கூடங்குளம் போலீசார், தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். “உள்ளூரிலே ஏராளமான படித்த இளைஞர்கள் வேலையின்றி உள்ள நிலையில், அணு உலையில் அவர்களை பணிக்கு அமர்த்தாமல் அண்டை நாடான நேபாளத்தை சேர்ந்தவர்களை குறைந்த கூலிக்கு அழைத்து வருவதில் என்ன நியாயம்?” என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

போராட்டம்

மேலும், “ஏற்கெனவே அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு ஏராளமானவர்கள் பணிபுரியும் நிலையில், தற்போது நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களை குறைந்த ஊதியத்திற்கு அழைத்து வந்தது ஏன்? அவர்களை வெளியேற்றும் வரை பணிக்கு யாரையும் செல்ல அனுமதிக்க மாட்டோம்” என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.