தமிழ்நாடு

மின்கம்பத்தில் ஏறிய மின்வாரிய ஊழியர் பரிதாப பலி

webteam

சேலத்தில் மின்கம்பத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் குமார். மின்வாரிய ஊழியரான இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்து சேலம் தில்லைநகர் மின்வாரிய அலுவலகத்தில் வயர் மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பொன்னம்மாபேட்டை அண்ணா நகர் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக மின்கம்பத்தில் ஏறினார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்ட குமார் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். 

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அம்மாபேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.