Tragic decision pt desk
தமிழ்நாடு

சேலம்: 17 வயது தம்பியோடு ஏற்பட்ட தகராறில் வன்முறை... பயத்தில் 18 வயது அண்ணன் எடுத்த விபரீத முடிவு!

தலைவாசலில் சகோதரர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் தம்பியை கத்தியால் குத்திவிட்டு அண்ணன் தற்கொலை; போலீசார் விசாரணை

PT WEB

செய்தியாளர்: ஆர்.ரவி

சேலம் மாவட்டம், தலைவாசல் மும்முடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (50). இவரது மூத்த மகன் கிருபாநாத் (18), தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தார். மற்றொரு மகன் ரவிபிரசாந்த் (17) அதே பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை எழுந்து வந்துள்ளது. அப்படி நேற்று தம்பி ரவி பிரசாந்த் அண்ணன் கிருபாநாத்திடம் தகராறு செய்துள்ளார்.

மோதல்

இதில், ஆத்திரமடைந்த அண்ணன் கிருபாநாத் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தம்பி ரவிபிரசாந்த்தின் தொண்டையில் குத்தியுள்ளார். அப்போது ரவிபிரசாந்த் கீழே விழுந்ததை பார்த்து பயந்துபோன கிருபாநாத், வீட்டினுள் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்த அப்பகுதியினர் இருவரையும் மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கிருபாநாத், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ரவிபிரசாந்த்துக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆபத்தான நிலையில் உள்ள ரவிபிரசாந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, தலைவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.