Madurai High court Representational Image
தமிழ்நாடு

"வங்கி நிர்வாகத்துக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டியதை குற்றமாகக் கருத முடியாது" - நீதிமன்றம்

webteam

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சிபிகா தர்ஷினி என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டில் அங்குள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இதையடுத்து அவரது கல்விச் செலவுக்காக வித்யா ஜோதி கடன் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கல்விக் கடன் கோரி விண்ணப்பித்தார்.

விண்ணப்பித்து 15 மாதங்கள் கடந்த நிலையிலும் அவருக்குக் கடன் வழங்கப்படவில்லை. இதையடுத்து, அவரது தந்தை ஒரு தன்னார்வ அமைப்பு சார்பில் வங்கி நிர்வாகம் கல்விக் கடன் வழங்கும் நடவடிக்கையை காலம் தாழ்த்தி, மத்திய அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக் கூடாது என சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார்.

court order

இதையடுத்து, அந்த மாணவிக்கு கல்விக் கடன் வழங்க முன்வந்த வங்கி நிர்வாகம், வங்கிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதற்கு மன்னிப்புக் கடிதம் அளித்தால், கடன் வழங்கப்படும் என நிபந்தனை விதித்துள்ளது. இதை எதிர்த்து, மாணவி சிபிகா தர்ஷினி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், "ஜனநாயக நாட்டில் அரசு இயந்திரம் சரியாக செயல்படவில்லையெனில் தொடர்புடைய நிர்வாகத்துக்கு எதிராக குரல் எழுப்பலாம். ஆனால், அந்த கண்டனம் யாரையும் புண்படுத்தக் கூடியதாகவும், தவறான வார்த்தைகளைக் கொண்டதாகவும் இருக்கக் கூடாது.

இதன்படி, கல்விக் கடன் வழங்கலில் இருந்த பிரச்னை தொடர்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தால், அதை குற்றறமாகக் கருத முடியாது. மேலும், தந்தையின் செயலுக்கு மாணவியிடம் வங்கி நிர்வாகம் மன்னிப்புக் கடிதம் கோரியதையும் ஏற்க முடியாது. எனவே, மன்னிப்புக் கடிதம் வேண்டும் என்ற நிபந்தனையைத் தவிர்த்து, தகுதி அடிப்படையில் மனுதாரருக்குக் கடன் வழங்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டார்.