தமிழ்நாடு

'எடப்பாடி பதறட்டும் கோபாலபுரம் கதறட்டும்' - பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு

'எடப்பாடி பதறட்டும் கோபாலபுரம் கதறட்டும்' - பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு

webteam

எடப்பாடி பதறட்டும் கோபாலபுரம் கதறட்டும் கழகங்கள் இல்லா தமிழகம் கவலைகள் இல்லா தமிழர்கள் என மதுரையில் பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக பாஜக கூட்டணி நீடித்து வந்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையேயான உரசல்கள் மறைமுகமாக நீடித்து வந்தது. இந்நிலையில் பாஜக ஐடி விங் நிர்வாகி நிர்மல் குமார் உட்பட பலர் பதவி விலகி அதிமுகவில் இணைந்தனர் இந்நிலையில், இந்த மோதல் வெளிப்படையாக வெளியே தெரியவந்தது. இதையடுத்து அதிமுக பாஜக தலைவர்களின் உருவ படங்கள் எரிப்பு, கூட்டணியில் சுமூக உறவு இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற போது தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என கூறியதாக தகவல்கள் வெளியானது. தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதிமுக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மதுரையில் பாஜக நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில், கழகங்கள் இல்லா தமிழகம், கவலைகள் இல்லாத தமிழர்கள் - உங்களோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு எங்கள் அண்ணாவே எடப்பாடி பதறட்டும், கோபாலபுரம் கதறட்டும் இவர் திராவிட அண்ணா இல்லை சங்கிகளின் அண்ணா என அண்ணாமலையின் படத்தை அச்சிட்டு போஸ்டர்களை ஒட்டிள்ளனர்.

ஏற்கெனவே பாஜக அதிமுக கூட்டணியில் விரிசல் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், பாஜகவினர், எடப்பாடி பழனிசாமிக்கும், திராவிட கட்சியான அதிமுகவிற்கும் எதிராக ஒட்டியுள்ள இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.