தமிழ்நாடு

புதிய தலைமுறை செய்தி எதிரொலியால் வீடுத் தேடி வந்த உதவி

PT


புதியதலைமுறை செய்தி எதிரொலியால் ஏழை மாணவனுக்கு ஓராண்டுக்குத் தேவையான ஓவியப் பொருட்கள் கிடைத்துள்ளது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த உள்ள வைத்தியநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் மாரிமுத்து. ஏழை மாணவனான மாரி முத்துவிற்கு ஓவியம் மீது தீராதக் காதல். ஓவியத்தின் மீதான காதலை ஊரடங்கு காலத்தில் வளர்த்தெடுக்க எண்ணிய அவருக்குப் போதிய உபகரணங்கள் வாங்க வசதியில்லை. இதனால் வீட்டின் சுவரிலேயே இலைச்சாறு, விபூதி, சுண்ணாம்பு, கரித்தூள், காபித்தூள் உள்ளிட்டவற்றைக் கொண்டு ஓவியங்களை வரைந்து வந்தார். இது குறித்த செய்தி கடந்த 11 ஆம் தேதி புதிய தலைமுறையில் வெளியானது.

இதனையறிந்த சீர்காழியைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகேயன்-யாமினி தம்பதியினர் மாரி முத்துவின் குடும்பத்துக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருட்களை அவரது வீட்டிற்கே சென்று வழங்கினர்.அத்துடன் மாரி முத்து ஓராண்டுக்கு ஓவியம் வரைவதற்குத் தேவையான 60க்கும் மேற்பட்ட பொருட்களை வழங்கினர்.இதனைப் பெற்றுக் கொண்ட மாரிமுத்தும் அவரது பெற்றோரும் புதிய தலைமுறைக்கு நன்றி தெரிவித்தனர்.