தமிழ்நாடு

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா!

JustinDurai

முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். இவர் நடந்து முடிந்த தேர்தலில் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில், ''பொது சுகாதார பரிசோதனை கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பிறகு என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்'' என்று கூறியுள்ளார்.