சிறுவனை நாய் கடித்த விவகாரம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை: சிறுவனை கடித்த நாய்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு... காரணம் என்ன?

PT WEB

சென்னையில் சிறுவனை கடித்த இரண்டு வளர்ப்பு நாய்கள் உயிரிழந்த நிலையில், அவற்றுக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னையை அடுத்த புழலில் கடந்த 1-ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற 12 வயது சிறுவனை, ராட்வைலர், பாக்ஸர் இன இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த சிறுவனுக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே சமயம் இரண்டு நாய்களையும் பிடித்துச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள், அவற்றுக்கு நோய் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிய, வேளச்சேரியில் உள்ள ப்ளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைத்தனர்.

இந்த சூழலில், இரண்டு நாய்களும் திடீரென அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தன. இதனால் நாய்கள் கடித்து குதறிய சிறுவனுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவியது.

உயிரிழந்த இரண்டு நாய்களுக்கும் சென்னை வேப்பேரியில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முதற்கட்ட அறிக்கையில், இரண்டு நாய்களுக்கும் ரேபிஸ் நோய் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அதேநேரம் நாய்கள் இறந்ததற்கான காரணம் என்ன, அவற்றுக்கு வேறு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பது குறித்த முழு ஆய்வறிக்கை நாளை வெளியான பிறகே தெரியவரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.