#BREAKING | வளர்ப்பு நாய் கடித்ததில் 6 வயது சிறுவன் படுகாயம்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை | 6 வயது சிறுவனை கடித்த எதிர்வீட்டு வளர்ப்பு நாய்!

PT WEB

செய்தியாளர் - அன்பரசன்

சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் 13 வது பிளாக் நான்காவது மாடியில் வசித்து வருபவர் அருண்குமார் - தேன்மொழி தம்பதியினர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், ஆறு வயதில் ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர். அருண்குமார் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு எதிர் வீட்டில் ஸ்டெல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், ஸ்டெல்லா வீட்டில் நாட்டு வகை தெருநாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர்.

தெரு நாய்கள்

இந்த நிலையில், நேற்று மதியம் ஆறு வயது சிறுவன் ஹரிஷ் தனது குடியிருப்புக்கு கீழே சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்த போது, ஸ்டெல்லாவின் பத்து வயது மகன் அரவிந்த் என்பவர் நாயை நடைப்பயிற்சிக்காக வீட்டிற்கு கீழே அழைத்து வந்துள்ளார்.

அப்போது அங்கு ஏற்கெனவே நின்றிருந்த மற்றொரு தெரு நாய்க்கும் அரவிந்த் அழைத்து வந்த நாய்க்கும் இடையே சண்டை ஏற்பட்டு இரண்டு நாய்களும் குரைத்துள்ளன. அந்த நேரத்தில் அங்கு இருந்த நபர் ஒருவர் நாயை விரட்டியுள்ளார். அப்போது அரவிந்த் தன் கையில் பிடித்திருந்த நாயானது அருகில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ஹரிஷ் மீது பாய்ந்து கடித்துள்ளது.

நாய்

இதனைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் நாயை விரட்டி ஆறு வயது சிறுவனை மீட்டனர். நாய் கடித்ததில் ஆறு வயது சிறுவன் ஹரிஷ்க்கு முதுகு, கை, முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பேசிண்ட் பிரிட்ஜ் போலீசார் விலங்குகள் நல வாரியத்திடம் நாயை ஒப்படைத்தனர். பின் நாயை வளர்த்து வந்த ஸ்டெல்லா, அவரது மகள் ப்ரீத்தா உட்பட மூவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

தெரு நாய்கள்

வீட்டில் வளர்க்கும் விலங்கு பிறரை கடித்தோ அல்லது வேறு வகையில் தாக்கியோ ஆபத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பேசிண்ட் பிரிட்ஜ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.