தமிழ்நாடு

தமிழகத்தில் முழு முடக்கம் ஒன்றே தீர்வு: மருத்துவர்கள் சங்கம்

Sinekadhara

‌கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பும் அதிகரித்து வருவதால் முழு முடக்கம் ஒன்றே தீர்வு என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில் விடுத்துள்ள அறிக்கையில், "தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர், ஆக்சிஜன் இல்லாததால் சிகிச்சையில் அவர்களின் பங்களிப்பு குறைந்துவிட்டது.

தொற்றை கையாள முழு முடக்கம் ஒன்றே வழி. முழு முடக்கத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். முழு முடக்க காலத்தை ஆக்சிஜன் படுக்கைகளை உயர்த்த, ஆக்சிஜன் உற்பத்தியை உயர்த்த, ஆக்சிஜனை பகிர்ந்தளிக்க பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தற்போது நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆக்சிஜன் படுக்கைகள் போதுமானதாக இல்லை. நோயாளிகளுக்கு ஏற்றவாறு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள 18 ஆயிரம் அரசு டாக்டர்களின் கோரிக்கை" என்று அவர் கூறியுள்ளார்.