Governor RN.Ravi pt desk
தமிழ்நாடு

தமிழக பல்கலைக்கழகங்கள் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் பதில்!

webteam

செய்தியாளர்: ஜான்சன்

பல்கலைகழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு கடந்த இரண்டு நாட்களாக உதகை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் இரண்டாவது நாளான நேற்று துணை வேந்தர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது...

“பல்கலைக்கழகங்கள் தொலைநோக்கு பார்வையோடு செயல்பட வேண்டும். பல்கலைக்கழகங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மாணவர்கள் மத்தியில் உயர்க்கல்வி, வேலை வாய்ப்பு, எதைப்படிக்க வேண்டும் என்பது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பேராசிரியர்கள் இதுகுறித்து மாணவர்களை வழிநடத்த வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

Governor RN.Ravi

ஆனால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 50 சதவீதம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. பல கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள்தான் பாடம் நடத்துகிறார்கள். கல்லூரி மாணவர்களை, அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனுப்புகின்றனர். இது கல்லூரி மாணவர்கள் செய்ய வேண்டிய வேலை இல்லை. சில இடங்களில் உயர் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை பள்ளிகளின் தளவாட பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது.

தமிழகத்தில் ஆண்டுக்கு 1500 மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுகிறார்கள். அதில், 5 சதவீதம் மாணவர்களே தரமிக்கவர்களாக இருகின்றனர். நெட் தேர்வு குறித்து தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு அதிக விழிப்புணர்வு உள்ளது. அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. இதனால் குறைந்த அளவே தேர்ச்சி பெறுகின்றனர். தமிழக பாடத்திட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலு நாச்சியார் போன்ற ஒரு சில சுதந்திரப்போராட்ட தியாகிகளை பற்றி மட்டுமே உள்ளது.

Governor RN.Ravi

தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் மற்றும் இயக்கங்கள் குறித்த வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர் பிஜீ தீவு போன்ற பகுதிகளுக்கு தமிழர்கள், நில உரிமையாளர்களுக்கு விற்கப்பட்டார்கள், இந்த வரலாறு பாட புத்தகத்தில் இடம்பெற வேண்டாமா? இது எனக்கு வேதனை அளிக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாறு குறைவாகவே உள்ளது. அதேபோல் தலித் தலைவர்களை பற்றிய அதிக வரலாறுகள் இல்லை. ஆனால், திராவிட இயக்க வரலாறு நிறைந்துள்ளது. இது மட்டுமே வரலாறு இல்லை. இது போன்ற வரலாற்றை மறைப்பது அவமதிப்பு செயலாகும்.

உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களான ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, நானோ தொழில்நுட்பம் போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாம் அறியாவிட்டால் பின் தங்கிவிடுவோம். இதனால் ஏற்றதாழ்வு அதிகரிக்கும்.

தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் உலகில் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள். நம் நாடு முன்னேறி வரும் நாடாக உள்ளது. மத்திய அரசின் செயல் திட்டங்கள் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் உள்ள மாணவர்கள் திறமையானவர்கள் இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பார்கள், அவர்களை நீங்கள் சரியான வழியில் வழி நடத்த வேண்டும்” என்றார்.

இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “ஆளுநர் ரவி தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார். உதகையில் ஓய்வெடுப்பதற்காக துணைவேந்தர்களை அழைத்துச் சென்றுள்ளார் ஆளுநர்.

TKS.Elangovan

மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தமிழ்நாடு கல்வியில் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. உத்தரப்பிரதேச, பீகார் கல்வி முறையை தமிழ்நாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார். தமிழக மாணவர்களை மனுதர்ம மாணவர்களாக மாற்ற ஆளுநர் முயற்சி செய்கிறார்.

பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் இல்லை. பல்கலைக்கழகங்களுக்கான தலைவராக கல்வியாளரை நியமிக்க வேண்டும்” என்றுள்ளார்.