தமிழ்நாடு

கிருஷ்ணர் பற்றி கி.வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் தவறுதான்: மு.க.ஸ்டாலின்

கிருஷ்ணர் பற்றி கி.வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் தவறுதான்: மு.க.ஸ்டாலின்

webteam

கிருஷ்ணரைப் பற்றி கி.வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறுதான் என்று திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை பற்றி பேசும்போது, தி.க.தலைவர் கி.வீரமணி கிருஷ்ணர் பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இந்நிலையில் திருச்சி தேர்தல் பிரசாரத்தில் தி.க.வினர் மீது இந்து அமைப்பினர் செருப்புகளையும் கற்களையும் வீசினர். இது பரபரப்பானது. இந்நிலையில் கி.வீரமணி அப்படி பேசியிருந் தால் அது தவறுதான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘’ கி..வீரமணி, கிருஷ்ணர் பற்றி தேர்தல் பிரசாரத்தில் பேசிய பேச்சு அல்ல, அது. பெரியார் திடலில் பேசிய பேச்சு. கேவலப்படுத்தி, கொச்சைப் படுத்தி, பேச வேண்டும் என்று அப்படிப் பேசவில்லை. சில உதாரணங்களைச் சொல்லி அவர் பேசியிருக்கிறார். அதை, சில ஊடகங்கள், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் தவறாகச் சித்தரித்து மக்களிடம் தவறானப் பிரசாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு செய்திருக்கும் சதி இது. அது உண்மையல்ல, உண்மையாக இருந்திருந்தால் தவறு என்றுதான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

திமுகவை பொறுத்தவரை, அண்ணாவின் கொள்கை ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பது. கலைஞர் கூட ’பராசக்தி’ வசனத்தில் தெளிவாகக் கூறியிருப்பார், ‘கோயில்கள் கூடாது என்பதற்காக அல்ல, கோயில்கள் கொடியவர்கள் கூடாரமாக ஆகிவிடக்கூடாது’ என்று. இதுதான் எங்கள் கொள்கை. திமுகவில் 90 சதவிகித் தினர் இந்துக்கள்தான் இருக்கிறார்கள். இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் என் துணைவியார் கூட ஆலயங்களில் சென்று வழிபட்டுகொண்டு தான் இருக்கிறார். ஏன் கோயிலுக்கு செல்கிறீர்கள் என்று நான் கேட்டதில்லை. அதனால் வீரமணி விவகாரம், திட்டமிட்டு, வேண்டுமென்ற நடக்கிற பிரசாரமே தவிர வேறொன்றுமில்லை’’ என்றார் மு.க.ஸ்டாலின்