தமிழ்நாடு

கருணாநிதி பழைய நிலைக்கு திரும்பிவிட்டார் - தொண்டர்கள் மத்தியில் ஆ.ராசா பேச்சு

webteam

திமுக தலைவர் கருணாநிதி பழைய நிலைக்கு திரும்பிவிட்டதால், மருத்துவமனை முன்பு திரண்டு இருக்கும் தொண்டர்கள் கலந்து செல்ல வேண்டும் என்று திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வலியுறுத்தினார். 

திமுக தலைவரின் உடல்நிலை குறித்து விசாரிக்க திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனைக்கு வந்தார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்த பின்னர் அன்பழகன் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். ஆனால், மருத்துவமனை முன்பு தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் அவரால் வெளியே செல்ல முடியவில்லை.

இதனையடுத்து, மருத்துவமனை முன்பு திரண்டிருந்த தொண்டர்கள் முன்பாக ஆ.ராசா பேசினார். பேராசிரியர் அன்பழகன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதால் தொண்டர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று தொண்டர்களிடம் வலியுறுத்தினார். அவரது வேண்டுகோளை அடுத்து அன்பழகன் ஒருவழியாக அங்கிருந்து புறப்பட்டார்.

இதனிடையே, அமைதிகாக்குமாறு திமுக தொண்டர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். போலீசார் ஒலிப் பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். தொண்டர்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்றும் போலீசார் கூறினர். தேனாம்பேட்டை காவல்நிலையம் அருகே அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.