தமிழ்நாடு

தமிழகத்தில் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்.... மாவட்ட வாரியான கள நிலவரம்

Sinekadhara

13-வது ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்து பல ஆண்டுகளாகியும் இதுவரை 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தி முடிவு செய்யாமல் காலம் தாழ்த்துவதாக தமிழக அரசை கண்டித்தும், பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள பணப்பலனை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளின் மாவட்டவாரிய விவரம்

  • கும்பகோணம் கோட்டம் காரைக்குடி மண்டலத்திலிருந்து இயக்கப்பட வேண்டிய 251 பேருந்துகளில், தற்போது 75 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 302 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இன்று 5 - முதல் 7 பேருந்துகள் மட்டுமே இயங்குகிறது. அதாவது 99% பேருந்துகள் ஓடவில்லை.
  • தேனி மாவட்டத்தில் 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
  • தருமபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 343 பேருந்துகளில் 193 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதாவது 60% இயக்கப்படுகின்றன.
  • திருப்பூரில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை
  • மதுரை உசிலம்பட்டி பகுதியில் 86 பேருந்துகள் இயங்கிவந்த நிலையில் இன்று 14 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதாவது 10% மட்டுமே இயக்கத்தில் உள்ளது.
  • செக்காணூரணி போக்குவரத்து பணிமனையில் 40 பேருந்துகள் உள்ள சூழலில் 14 பேருந்துகள் மட்டுமே அண்ணா தொழிற்சங்கத்தின் ஓட்டுநர்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.
  • நாகை மாவட்டத்தில் 115 பேருந்துகளில் நாகையில் 21 பேருந்தும் வேதாரண்யத்தில் 8 பேருந்தும் 29 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.
  • திண்டுக்கல் மாவட்டத்தில் 420 பேருந்துகளில் 30 சதவீத பேருந்துகள் மட்டுமே ஆளும் கட்சியை சேர்ந்த அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது. 70 சதவீத அரசு பேருந்துகள் இயங்கவில்லை.