Director Durai pt desk
தமிழ்நாடு

தேசிய விருது வென்ற இயக்குநர் துரை காலமானார்

webteam

செய்தியாளர்: எழில் கிருஷ்ணா

சென்னை அம்பத்தூர் பகுதியில் 1940- ஆம் ஆண்டு பிறந்த துரை, தனது திரைப் பயணத்தை சவுண்ட் இன்ஜினியராக தொடங்கினார். பின்னர் திரைப்பட எடிட்டராகவும், கன்னட மொழியில் துணை இயக்குனர் உள்பட பல்வேறு பரிமாணங்களில் திரைத்துறையில் பயணித்தவர் ஜேஎஃப்சி துரை. இவர், "அவளும் பெண்தானே" என்ற தனது முதல் தமிழ் மொழி திரைப்படத்தை இயக்கினார்.

director Durai with MGR

பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்பட 5 மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட சமூக அக்கறை கொண்ட திரைப் படங்களை இயக்கி பெருமை பெற்றவர் JFC துரை.

"சதுரங்கம்", "அவள் ஒரு காவியம்", "ஒரு வீடு ஒரு உலகம்", "எங்கள் வாத்தியார்" உள்ளிட்ட அவர் இயக்கிய திரைப்படங்கள் மாநில விருதுகளையும், "பசி" என்ற திரைப்படம் தேசிய விருதையும் பெற்றுள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக தனது 84 வது வயதில் JFC துரை காலமானார். இவரது உடல் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள அவரது திருமண மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு நாளை முற்பகல் 11 மணியளவில், நல்லடக்கம் செய்யப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.