புகாரளித்த பெண் puthiya thalaimurai
தமிழ்நாடு

திண்டுக்கல்: “கள்ளத்தனமாக மதுபானம் விற்கும் என் கணவர் மீது நடவடிக்கை எடுங்க” ஆட்சியரிடம் பெண் புகார்

webteam

செய்தியாளர்: காளிராஜன்

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜய பாண்டி (40) - ரூபாலா (34) தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆன நிலையில், ஒரு பெண் குழந்தை உள்ளார். விஜய பாண்டி தனது மனைவி ரூபாலாவை பிரிந்து வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக தெரியவருகிறது. இந்நிலையில், தனது குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்த ரூபாலா மனு ஒன்றை அளித்துள்ளார்.

Collector Office

அதில், “எனது கணவர் விஜய பாண்டி, அரசு மதுபானங்களை வாங்கி கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார். மேலும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு குடும்பத்தை கவனிப்பதில்லை, வீட்டிற்கும் வருவதில்லை.

இதுதொடர்பாக எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யும் என் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். தனது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.