குழந்தை ஏலம் விடும் விநோத திருவிழா புதிய தலைமுறை
தமிழ்நாடு

திண்டுக்கல்: முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா - குழந்தைகளை ஏலம் விடும் வினோதம்

திண்டுக்கல் முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா நடைபெற்றது.

webteam

செய்தியாளர்: காளிராஜன்

திண்டுக்கல், முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் ஆலயம் 350 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், திருவிழாவில் முக்கிய நிகழ்வாக இன்று புனித செபாஸ்டியர் ஆலயத்தில் 'உடல் நலம் சரியாக வேண்டும், குழந்தை வரம் வேண்டும், கடன் தொல்லைகள் தீர வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை வைத்தவர்கள், ஆட்டுக் கிடா, கோழி, மாடுகளை காணிக்கையாக வழங்கினர்.

முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் ஆலயம்

இதில், கிடா மற்றும் கோழி ஆகியவற்றை சமையல் செய்து இன்று மாலை முதல் நாளை காலை வரை அன்னதானமாக வழங்கப்படும். அதேபோல் மாடுகள் ஏலம் விடப்பட்டு அதன் காணிக்கைகள் கோயில் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இதன் முக்கிய நிகழ்வாக குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா நடைபெற்று வருகிறது.

குறிப்பாக குழந்தைகள் வேண்டியும், குழந்தைகள் உடல்நலம் சரியாக வேண்டியும் குழந்தைகளை ஏலம் விடுவதாக பெற்றோர் வேண்டிக் கொள்கின்றனர். அதன்படி வேண்டுதல் நிறைவேறியவர்கள் குழந்தைகளை ஏலம் விடுவதற்காக ஆலயத்திற்கு வந்தனர்.

குழந்தை ஏலம் விடும் விநோத திருவிழா

இதைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை, கோயமுத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலர் தங்கள் குழந்தைகளை ஏலம் விட்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். இந்த ஏலத்தில் குழந்தையின் உறவினர்களே குழந்தைகளை ஏலத்தில் எடுத்து மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.