ரிச்சர்டு சச்சின், போலீஸ் இன்ஸ்பெக்டர் pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல்: அரிவாளால் வெட்டிவிட்டு தப்பமுயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

PT WEB

செய்தியாளர்: காளிராஜ்.த

திண்டுக்கல் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி இர்ஃபான். இவரும், இவரது நண்பர் முகமது அப்துல்லாவும் இருசக்கர வாகனத்தில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சென்றுள்ளனர். அப்பொழுது இவர்களை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவரையும் சரமாரி வெட்டியுள்ளனர்.

இதில் இர்ஃபான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த முகமது அப்துல்லா அங்கிருந்து தப்பி உயிர் பிழைத்தார். பின்னர் காவல்துறையினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இர்ஃபான்

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார், இர்ஃபானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட இர்ஃபான் மீது கொலை உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த முத்தழகுப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் எடிசன் சக்கரவர்த்தி, தனசாமி என்பவரின் மகன் ரிச்சர்டு சச்சின், அருள்ராஜ் என்பவரின் மகன் மார்ட்டின் நித்திஷ், மற்றும் மாரம்பாடியைச் சேர்ந்த பிரவீன் லாரன்ஸ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் நான்கு பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய் முத்தழகுபட்டியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகன்கள் சைமன் செபாஸ்டின் (22), எடிசன் ராஜ் (24) ஆகிய இருவரும் நீதிபதி ஆனந்தி முன்னிலையில் சரணடைந்தனர்.

Accused

இதையடுத்து படுகொலையின் போது பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் அணிந்திருந்த உடைகள் ஆகியவற்றை கைப்பற்றுவதற்காக ரிச்சர்ட் சச்சினை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பாதுகாப்புடன் திண்டுக்கல் அடுத்துள்ள மாலப்பட்டி சுடுகாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது ரிச்சர்ட் சச்சின் அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காவலர் அருண் பிரசாத்தின் இடது கையில் வெட்டி விட்டு தப்பியோட முயன்றுள்ளார்.

அப்பொழுது ஆய்வாளர் வெங்கடாசலபதி தனது கை துப்பாக்கியால் ரிச்சர்ட் சச்சினின் வலது காலில் சுட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ரிச்சர்ட் சச்சின் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்ட போலீசார், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அரிவாளால் வெட்டப்பட்ட காவலர் அருண் பிரசாத் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.