Tragedy pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல்: கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள இளைஞரை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்

webteam

செய்தியாளர்: காளிராஜன்.த

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் இருந்து மொட்டணம்பட்டி செல்லும் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் வினோத் - மஞ்சுளா தம்பதியர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வினோத், சுள்ளான் என்பவரை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்பொழுது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். திண்டுக்கல்லில் இருந்தால் எதிரிகளால் தனது உயிருக்கு ஆபத்து என்ற நிலையில், தற்பொழுது வினோத் திருப்பூரில் வசித்து வந்திருக்கிறார்.

Police investigation

இந்நிலையில் வினோத், தனது மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூர் அழைத்துச் செல்வதற்காக நேற்று இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது வீட்டில் தாய், மனைவி, அக்கா மற்றும் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து தாய், மனைவி, குழந்தைகளின் கண் முன்னே வினோத்தை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பழிக்கு பழியாக கொலை நடந்துள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.