CCTV footage pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல்: ட்ரிலிங் மெஷின் கொண்டு ATM இயந்திரத்தை உடைக்க முயற்சி - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

webteam

செய்தியாளர்: காளிராஜன்

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள மூனாண்டிபட்டி பகுதியில் ஏராளமான தனியார் நூற்பாலைகள் மற்றும் எண்ணெய் ஆலைகள் உள்ளன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பணம் எடுப்பதற்காக வடமதுரையில் செயல்படும் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மூனாண்டிபட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

CCTV footage

இந்த நிலையில் (ஜூலை 24) அதிகாலை 3 மணியளவில் முகத்தை துணியால் மறைத்தபடி வந்த மர்ம நபர்கள் 2 பேர், ட்ரிலிங் மிஷினைக் கொண்டு ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர். நீண்ட நேரம் முயற்சி செய்தும் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதனை அங்கிருந்த கண்காணிப்பு கேமரா வழியாக பார்த்த வங்கி மேலிட அதிகாரிகள் இது குறித்து வடமதுரை வங்கிக் கிளைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வடமதுரை கிளை மேலாளர் மற்றும் வங்கி ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயன்றது தெரியவந்தது. ஆனால், அவர்களால் எந்திரத்தை உடைக்க முடியாததால் ஏ.டி.எம் மெஷினில் வைத்திருந்த பணம் ரூ.4 லட்சத்தி 44 ஆயிரம் தப்பியது.

இது குறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.