தமிழ்நாடு

திண்டுக்கல்: காணாமல்போன காதல் கணவனை மீட்டுத்தரக் கோரி தீக்குளிக்க முயன்ற இளம் பெண்

kaleelrahman

காதல் கணவனை மீட்டுத் தரக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் ஆர்விஎஸ் நகரைச் சேர்ந்தவர் நந்தினி (23). இவர், திருச்சி மாவட்டம் வையம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நந்தினி இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோது கார்த்திக், நந்தினி விட்டுவிட்டுச் சென்றவர், எங்கு சென்றார் என தெரியவில்லை. இது தொடர்பாக கார்த்திக்கின் பெற்றோரிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காமல் தட்டிக் கழித்துள்ளனர்.

இதுதொடர்பாக நந்தினி, மகளிர் காவல் நிலையத்திலும், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் இதுவரை கார்த்திகை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த நந்தினி, இன்று தனது கைக்குழந்தையுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் கணவர் கார்த்திக் உடன் சேர்த்து வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.