பார்வையிட சென்றவர்களுடன் வாக்குவாதம் pt web
தமிழ்நாடு

மின்மயான கழிவுகளை பழங்குடி மக்கள் நிலத்தில் கொட்டியதா ஈஷா? பார்வையிட சென்றவர்கள் மீதும் தாக்குதல்..

PT WEB

கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில், பழங்குடி மக்களுக்கு வழங்கிய 44.3 ஏக்கர் நிலத்தை, ஈஷா யோகா மைய ஆட்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து கோவை தெற்கு வருவாய் கோட்டாச்சியர் தலைமையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு 44.3 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்றும், நிலத்தை வேறு யாரும் பயன்படுத்த கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், 44.3 ஏக்கர் நிலத்தில் குளம் ஒன்றை வெட்டி, அதில் மின்மாயன கழிவுகளை கொட்டி, பழங்குடி மக்கள் நிலத்தை பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்த ஈஷா மையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் உண்மை நிலவரம் என்னவென்று அறிய, கடந்த 14ஆம் தேதி நிலத்தை பார்வையிட சென்ற, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினரின் வாகனத்தை தடுத்து, கண்ணாடியை உடைத்து ஈஷா யோகா மையத்தினர் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.