தமிழ்நாடு

ஹாசினி கொலைக் குற்றவாளி தஷ்வந்தின் கூட்டாளி கைது

Rasus

சிறுமி ஹாசினி மற்றும‌ தாய் சரளா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்தின் கூட்டாளி மணிகண்டனை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட தஷ்வந்த், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்யவே, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், தனது தாய் சரளாவையும் கொன்றுவிட்டு நகைகளுடன் மாயமானார்.

இதனையடுத்து மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை போலீஸார் சுற்றிவளைத்து கைதுசெய்தனர். ஆனால் விமான நிலையம் அழைத்துச் செல்லும் வழியில், போலீஸாரைத் தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பினார். தப்பியோடிய தஷ்வந்த்தை மீண்டும் 24 மணி நேரத்திற்குள் மும்பை போலீஸார் உதவியுடன் சென்னை போலீஸார் மும்பையில் கைது செய்தனர். தஷ்வந்த் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தாய் சரளாவைக் கொன்றுவிட்டு கொள்ளையடித்த நகைகளை தஷ்வந்த், சிறையில் தன்னுடன் பழகிய மணிகண்டனிடம் கொடுத்ததாகவும், ஆனால் குறைவான பணத்தைக் கொடுத்துவிட்டு தங்க நகைகளுடன் மணிகண்டன் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிகன்டனை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.